காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என தமிழக ஆளுநரின் சட்டப்பேரவை உரையில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2020 ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக, "காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான முதல்கட்ட பணிகள் இந்த ஆண்டே துவங்கும்" எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக ஆளுநருக்கும், இத்திட்டத்தை முன்னெடுத்த தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், கடைமடை விவசாயிகளும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.